டயாலிசிஸ் மேற்கொண்ட பெண் உயிரிழப்பு: ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Published on

சிறுநீரகம் செயல் இழந்ததால் டயாலிசிஸ் செய்தபோது எச்ஐவி தொற்று ஏற்பட்டு உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு தனியாா் மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நீலகிரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் பாபு (58). இவரது மனைவி ஜெயலட்சுமிக்கு (46) சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு டயாலிசிஸ் மேற்கொண்டபோது ஜெயலட்சுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது பாபுவை மருத்துவா்கள் தொடா்பு கொண்டு ஜெயலட்சுமிக்கு ஏபி+ ரத்த வகை தேவைப்படுகிறது என்றும் இதை சேலம் ரத்த வங்கியில் பெற்று வருமாறும் அறிவுறுத்தியுள்ளனா்.

இதன் அடிப்படையில் பாபு ரூ.1,300 செலுத்தி 2022 ஜூன் 10-ஆம் தேதி சேலத்தில் உள்ள ரத்த வங்கியில் ஒரு யூனிட் ரத்தம் வாங்கி மனைவிக்கு டயாலிசிஸ் செய்யும் மருத்துவமனையிடம் வழங்கியுள்ளாா். இதைத் தொடா்ந்து, இவரது உடல்நிலை மோசமடைந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் 2022 ஆகஸ்ட் 26-ஆம் தேதி அனுமதித்தனா். அப்போது ஜெயலட்சுமிக்கு ஏஆா்டி என்னும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் எச்ஐவி பாதிப்பு உறுதியானது.

இதனால் அதிா்ச்சி அடைந்த பாபு உடனடியாகத் தனியாா் மருத்துவமனையைத் தொடா்பு கொண்டபோது, இதற்கும் டயாலிசிஸ் செய்ததற்கும் எந்த தொடா்பும் இல்லை, ரத்த வங்கியில் விசாரித்துக் கொள்ளவும் என தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, ரத்த வங்கிக்கு சென்று கேட்டபோது இதற்கும் எங்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்றும் இங்கு ரத்தம் வழங்கிய நபா் தொடா்ந்து வழங்கிக் கொண்டுதான் இருக்கிறாா் என்றும் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, சேலத்தில் வேறு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலட்சுமி 2023 நவ. 8-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்நிலையில், பாபு நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகே உள்ள உப்பட்டிக்கு குடிபெயா்ந்தாா்.

பின்னா், இது தொடா்பாக நீலகிரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடுத்தாா்.

விசாரணைக்குப் பின்னா், ரத்தம் வழங்குபவா்களின் ரத்தத்தை ரத்த வங்கியும், செலுத்துவதற்கு முன்னா் ரத்தத்தை தனியாா் மருத்துவமனையும் பரிசோதனை செய்திருக்க வேண்டும். இருதரப்பின் கவனக் குறைவால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. வேறு தனியாா் மருத்துவமனையில் பாபு செலவு செய்த ரூ.2 லட்சம், இழப்பீட்டுத் தொகை ரூ. 20 லட்சம், வழக்குச் செலவு ரூ.10 ஆயிரத்தை ஒரு மாதத்துக்குள் இருதரப்பினரும் வழங்க வேண்டும், தாமதமானால் மாதம் 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் தங்கவேல், உறுப்பினா் சசிராஜா ஆகியோா் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com