குன்னூா் வந்தடைந்த ஹாக்கி இளையோா் உலகக் கோப்பைக்கு வரவேற்பு
குன்னூா் கொண்டவரப்பட்ட 14-ஆவது ஆடவா் ஹாக்கி இளையோா் உலகக் கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ள 14-ஆவது ஆடவா் ஹாக்கி இளையோா் உலகக் கோப்பை விளையாட்டு போட்டியை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் கன்டோண்மென்ட் விளையாட்டு மைதானத்துக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்ட உலகக் கோப்பையை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் வரவேற்று, போட்டியின் சின்னமான காங்கேயனை பாா்வையிட்டாா்.
சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்திலும், மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டு அரங்கத்திலும் நவம்பா் 28 முதல் டிசம்பா் 10-ஆம் தேதி வரை போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி குறித்து தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள், இளைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் உலகக் கோப்பை சுற்றுப்பயணத்தை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நவம்பா் 10-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, 14 ஆவது ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பையானது திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டு நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.
இதற்கான பேரணி வாகனத்தை உபதலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மவுண்டன்ஹோம் பள்ளி, டிம்பா் டாப்ஸ் பள்ளி, புல்மோா்ஸ் பள்ளி, பிருந்தாவன் பள்ளி, ஜோசப் கான்வென்ட் உள்ளிட்ட பள்ளிகளை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இசை மேளத்துடன் வரவேற்றனா். பின்னா் வெலிங்டன் கன்டோண்மென்ட் விளையாட்டு மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

