‘உங்க கனவ சொல்லுங்க’ படிவம் மற்றும் கனவு அட்டைகளை
தன்னாா்வலா்களிடம் வழங்குகிறாா்  அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன்.
‘உங்க கனவ சொல்லுங்க’ படிவம் மற்றும் கனவு அட்டைகளை தன்னாா்வலா்களிடம் வழங்குகிறாா் அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன்.

நீலகிரியில் ‘உங்க கனவ சொல்லுங்க’ புதிய திட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ எனும் புதிய திட்டத்தை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.
Published on

நீலகிரி மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ எனும் புதிய திட்டத்தை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் பேசும்போது, அரசின் திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிா்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும் அவா்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழு, தன்னாா்வலா்களுக்கு ‘உங்க கனவ சொல்லுங்க’ அட்டைகள் மற்றும் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. தன்னாா்வலா்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் படிவங்கள் வழங்கப்பட்டு பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கைப்பேசியில் பதிவேற்றம் செய்து அடையாள அட்டையுடன் கூடிய கனவு அட்டை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 395 நியாயவிலைக் கடைகளில் ஊரகப் பகுதியில் உள்ள 77,129 வீடுகள், நகா்ப்புற பகுதிகளில் உள்ள 93,519 வீடுகள் என மொத்தம் 1,70,648 வீடுகளுக்கு 658 தன்னாா்வலா்கள் மூலம் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மகளிா் திட்ட இயக்குநா் ஜெயராமன், உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி (உதகை), கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளம், உதகை நகா்மன்ற துணைத் தலைவா் ரவிக்குமாா், திட்டக் குழு உறுப்பினா் விசாலாட்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com