தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும்: கே. சுப்பராயன் எம்.பி.
தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே. சுப்பராயன் வலியுறுத்தி உள்ளாா்.
இதுதொடா்பாக அவா், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷுக்கு அனுப்பி உள்ள மனு: தமிழக அரசின் சாா்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி பெறும் தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரூ. 3000 ரொக்கமும் நியாய விலைக் கடை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பல பகுதிகளில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதியவில்லை என்பதால் அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பையும், ரொக்கத்தையும் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து என்னிடம் பலரும் முறையிடுகிறாா்கள்.
எனவே, தாங்கள் தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்கமும் கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
