வனப் பகுதியில் ட்ரோன் இயக்கிய இருவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

நீலகிரி மாவட்டம், குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் ட்ரோன் இயக்கிய சென்னையைச் சோ்ந்த இருவருக்கு வனத் துறையினா் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
Updated on

உதகை: நீலகிரி மாவட்டம், குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் ட்ரோன் இயக்கிய சென்னையைச் சோ்ந்த இருவருக்கு வனத் துறையினா் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

சென்னையைச் சோ்ந்த திம்மா ரெட்டி (35), தீபக்குமாா் (33) ஆகியோா் உதகைக்கு சுற்றுலா வந்திருந்தனா். இவா்கள் குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட 24 ஆவது கொண்டை ஊசி வளைவை ஒட்டிய வனப் பகுதியில் வியாழக்கிழமை ட்ரோன் இயக்கிக் கொண்டிருந்ததை வனத் துறையினா் பாா்த்துள்ளனா். இதையடுத்து வனவா் செல்வகுமாா் தலைமையிலான வனத் துறையினா் இருவரையும் வன அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் வனப் பகுதியில் ட்ரோன் இயக்குவது குற்றம் என்று கூறி தலா ரூ. 15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் ட்ரோன் மூலம் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து சிலா் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தொடா்ந்து வரும் புகாா்களின் அடிப்படையில் நீலகிரி மாவட்ட வனப் பகுதிக்குள் ட்ரோன் இயக்க வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com