ஊதியூர் அருகே கூடுதல் வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கப்படுவதால் பள்ளிக்கு உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காங்கயத்தை அடுத்த ஊதியூர் அருகே, தாயம்பாளையத்தில் அரசு உதவிபெறும் பள்ளிஉள்ளது. இப்பள்ளியில் சமத்துவபுரம், அப்பியபாளையம், நிழலி, கவுண்டம்பாளையம், பீலிக்காம்பட்டி, கருக்கம்பளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்கள் காங்கயத்தில் இருந்து வழித்தட எண்:கே-8 என்ற அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அப்பகுதிகளுக்கு இந்த ஒரு பேருந்து மட்டுமே சென்று வருகிறது. வழக்கமாக மேற்கண்ட பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு காலை 9.20 மணிக்கு தாயம்பளையம் பள்ளிக்கு அந்தப் பேருந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அந்தப் பேருந்து தாயம்பாளையத்திற்கு சுமார் ஒன்றரை கி.மீ. முன்னால் உள்ள பீலிக்காம்பட்டியில் இருந்து மரவபாளையம் என்ற ஊருக்கு கூடுதல் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதனால், பேருந்து அங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பயணிகளுடன் சென்று திரும்பி வர கூடுதலாக அரை மணிநேரம் ஆவதுடன், குறுகலான சாலையில், பேருந்தின் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு செல்வது ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.
மேலும், பேருந்து வழக்கமாக பள்ளிக்கு வந்துசேரும் காலை 9.20 மணிக்கு பதிலாக 9.50-க்கு வந்து சேர்கிறது. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. இதனால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, மாணவர்கள் கூறியது: தாராபுரத்தில் இருந்து காலை 9.10-க்கு ஒரு நகரப் பேருந்து தாயம்பாளையம் வந்து செல்கிறது. அந்தப் பேருந்து தாயம்பளையத்தில் 15 நிமிடம் நின்று செல்கிறது. எனவே, அந்தப் பேருந்தை மரவபாளையம் வரை இயக்கினால், காங்கயத்தில் இருந்து நாங்கள் பள்ளிக்கு செல்லும் பேருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு தாயம்பாளையம் சென்று சேரும். இதனால், நாங்களும் காலதாமதமின்றி பள்ளிக்குச் சென்று சேரமுடியும் என்றனர்.