போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது.
மதிமுக மாநகர நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தீர்மானக் குழு உறுப்பினர் ப.நேமிநாதன் தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணை அமைப்பாளர் எம்.சாந்தாமணி முன்னிலை வகித்தார். மாநகரச் செயலர் சு.சிவபாலன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வீட்டுவரி வசூலிப்பின்போது, வீட்டு வரியுடன், கூடுதலாக வீதிகளில் குப்பை அள்ளுவதற்கும் வரி வசூலிக்கப்படுகிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும்.
வளம் பாலத்தின் சாலை மிகவும் மோசமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கிழே விழுந்து பாதிப்படைகின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பாலத்தில் உள்ள குழிகளை சரி செய்ய வேண்டும். காலம் தாழ்த்தினால் மதிமுக சார்பில் பிப்ரவரி 8-ஆம் தேதி குழிகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்காத காரணத்தால் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் அரசு என்று அறிக்கை விடும் தமிழக அரசும், போக்குவரத்துக் கழக நிர்வாகமும், போராட்டத்தில் ஈடுபட்ட நாள்களுக்கு தொழிலாளர்களிடம் ஊதியம் பிடித்தம் செய்தது கண்டிக்கத்தக்கது. தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.