கடன் பிரச்னை: தந்தை, மகள் தற்கொலை
By DIN | Published On : 26th April 2019 07:41 AM | Last Updated : 26th April 2019 07:41 AM | அ+அ அ- |

கடன் பிரச்னையால் தந்தை, மகள் பூச்சி மருந்து குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி துரையூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (32), இவரது மனைவி தவமணி (30). இவர்களுக்கு மோனிகா (3) என்ற மகள் இருந்தார். இவர்கள் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவு ஊராட்சிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவரின் விவசாயத் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், சதீஷ்குமார் துரையூரில் வசித்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பணம் வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுக்க முடியாமல் கவுண்டம்பாளையத்துக்கு வந்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சதீஷ்குமாரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சிலர் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு கேட்டு புதன்கிழமை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், சதீஷ்குமார், தவமணி, மோனிகா மூன்று பேரும் தென்னை மரத்துக்கு தெளிக்கும்பூச்சி மருந்தை குடித்துவிட்டு 20 அடி ஆழம் கொண்ட தண்ணீர்த் தொட்டிக்குள் குதித்து வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதில் தவமணியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து மூன்று பேரையும் மீட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார், மோனிகா இருவரும் உயிரிழந்தனர். இவர்களது உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தவமணி அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.