திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கல்குவாரியில் குளித்தபோது மூழ்கிய டாஸ்மாக் ஊழியரின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் புதன்கிழமை மீட்டனர்.
தாராபுரத்தை அடுத்துள்ள சந்திராபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்தக் கல்குவாரி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் காங்கயம்பாளையத்தைச் சேர்ந்த நாட்ராயன் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கல் குவாரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற நாட்ராயன் தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் நாட்ராயனின் சடலத்தை தேடினர். ஆனால், போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்புப் பணி நிறுத்தினர்.
பின்னர் செவ்வாய்க்கிழமை மீட்புப் பணியை தொடர்ந்தனர். ஆனால், குளத்தில் சேறும் சகதியும் அதிகமாக இருந்ததால் சடலத்தை மீட்க முடியவில்லை. இந்த நிலையில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு புதன்கிழமை தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து, நாட்ராயனின் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு நாட்ராயனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து அலங்கியம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.