தெற்கு குறுமைய கபடி போட்டி:இடுவம்பாளையம் அரசுப் பள்ளி வெற்றி
By DIN | Published On : 28th August 2019 07:38 AM | Last Updated : 28th August 2019 07:38 AM | அ+அ அ- |

திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டியில் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றுள்ளது.
பல்லடம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் 8 பள்ளிகள் பங்கேற்றன. இதில் இறுதி ஆட்டத்தில் விளையாடிய இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அணி 32-10 என்ற புள்ளிகள் கணக்கில் காமாட்சியம்மன் பள்ளி அணியை வென்றது.
மேலும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 7 பள்ளிகள் கலந்து கொண்டன. இறுதி ஆட்டத்தில் விளையாடிய இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அணி 40-15 என்ற புள்ளிகள் கணக்கில் விஜயாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியை வென்றது. இதேபோல, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3 பள்ளிகள் கலந்து கொண்டன.
இறுதி ஆட்டத்தில் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி 29-22 என்ற புள்ளிகள் கணக்கில் எம்.என்.முருகப்ப செட்டியார் பள்ளி அணியை வென்றது.இந்தப் போட்டியில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், மோகன்ராஜ், பாலசுப்பிரமணியன், சரவணன் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.