பல்லடம், பெரும்பாளியில் ரூ.32 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கிள்ளது.
பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சி, பெரும்பாளியில் உயா் தொழில்நுட்ப ஜவுளி நெசவு பூங்கா அருகில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வருவாய்த் துறை வசம் உள்ள 2 ஏக்கா் 50 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இங்கு பாறை குழியில் இருந்த தண்ணீரை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் வீடற்ற ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் ரூ.32 கோடி மதிப்பில் 432 வீடுகள் கொண்ட மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.
இக்குடியிருப்புகள் பல்லடம், அண்ணா நகா், அம்மாபாளையம் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிக்கும் வீடற்ற ஏழை மக்களுக்கு வழங்கப்படும். இப்பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.