திருப்பூரில் ஏலச் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், வீரபாண்டி பகுதிக்கு உள்பட்ட முருகம்பாளையம் பகுதியில் வசிப்பவர் முருகேசன் (50), கட்டடத் தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (46). இந்நிலையில், இத்தம்பதி 2015ஆம் ஆண்டு முதல் ஏலச் சீட்டு நடத்தி வந்தனர். ஏலச் சீட்டில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வாரம் ரூ.1000 வீதம் பணம் செலுத்தி வந்தனராம். இந்நிலையில், ஏலச் சீட்டு முடிவடைந்தும் அதற்கான பணத்தைத் தராமல் இந்தத் தம்பதி காலம் கடத்தி வந்தனர். இது குறித்து சூர்யாகிருஷ்ணன் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்கணேசன் மனைவி சித்ராதேவி (39) வீரபாண்டி போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தார்.
இது குறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகேசன், அவரது மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.