திருப்பூர், மாணிக்காபுரம்புதூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
திருப்பூர், முதலிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மாணிக்காபுரம்புதூர் ( கே.2040) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மொத்தம் 1,850 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில், மொத்தம் 11 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் பெண்கள் 3 பேர், ஆதி திராவிடர்கள் 2 பேர் என 5 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு 7 பேர் போட்டியிட்டனர். சங்க வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 1,850 பேருக்கு 185 பேர் மட்டுமே வாக்களித்தனர். மற்றவர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரியான கூட்டுறவு சார் பதிவாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் சனிக்கிழமை 50க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் குறித்த விவரம் சுமார் 12 மணி அளவில் சங்கத் தகவல் பலகையில் வெளியிடப்பட்டது.
இதில், கே.கிருஷ்ணமூர்த்தி 160, என்.சிதம்பரம் 159, ஏ.வேலுச்சாமி 153, எஸ்.சதாசிவம் 148, பி.நாச்சிமுத்து 32 , ஜி.சரவணன் 23, பி.விஸ்வலிங்கசாமி 10 வாக்குகள் வீதம் பெற்றிருந்தனர். ஜூன் 12ஆம் தேதி சங்க அலுவலகத்தில் தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.