காங்கயம் அருகே உள்ள மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோயில்களில் வியாழக்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இக்கோயில்களில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாதத் தேர்த் திருவிழாவில் கடந்த 13 ஆம் தேதி கிராம் சாந்தி நிகழ்ச்சியும், 15-ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தேர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரகுபதி நாராயண பெருமாள் தேர், கணபதி தேர், பிரகல நாயகி அம்மன் தேர் என நான்கு தேர்கள் முன்னால் செல்ல, பெரிய தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளினார்.
ஒரு கிலோ மீட்டர் தூரம் வலம் வந்த தேர் மாலை 6.30 மணிக்கு நிலையை அடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.