சென்னிமலை அருகே ரூ.4.59 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 28th March 2019 09:21 AM | Last Updated : 28th March 2019 09:21 AM | அ+அ அ- |

சென்னிமலை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 4 லட்சத்து 59 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னிமலை அருகே உள்ள முகாசிப் பிடாரியூர் பகுதியில் புனிதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் ரொக்கம் இருந்ததும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. அதையடுத்து, காரை ஓட்டி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சத்தியனிடம் விசாரணை நடத்தினர். அதில் வியாபார நிமித்தமாக பணத்தைக் கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை, பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காங்கயம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூரில் ரூ. 69 ஆயிரம் பறிமுதல்: திருப்பூர் பாளையக்காட்டைச் சேர்ந்தவர் கார்மேகம் (36). இவர் தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், காங்கயம் - புதூர் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் கார்மேகம் புதன்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலை கண்காணிப்புக் குழுவினர் கார்மேகத்திடம் சோதனை நடத்தினர். இதில், உரிய ஆவணமின்றி அவர் கொண்டு சென்ற ரூ. 69 ஆயிரத்தை பறிமுதல் செய்து, திருப்பூர் தெற்கு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...