"விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் உயர்மின் கோபுரத் திட்டம் செயல்படுத்தப்படும்'
By DIN | Published On : 28th March 2019 09:24 AM | Last Updated : 28th March 2019 09:24 AM | அ+அ அ- |

விவசாயிகளின் நிலம் பறிபோகாமல் அதே சமயம் அவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் உயர்மின் கோபுரத் திட்டம் செயல்படுத்தப்படும் என கோவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்லடத்தில், செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான் மாநிலம் வளர்ச்சி அடையும். இதனை உணர்ந்தே அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் வரவேற்கின்றனர்.
சிறு, குறு தொழில் துறையினருக்கு ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்படும். கோவை தொகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க தேவையான இடங்களில் புதிய மேம்பாலம் கட்டப்படும். சாலை, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
நல்லாறு - ஆனைமலையாறு திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன். கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தி, தமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். விவசாயிகளின் நிலம் பறிபோகாதவாறும், அதே சமயம் அவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும் குத்தகை அடிப்படையில் உயர்மின் கோபுரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். பேட்டியின்போது பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், பாஜக மாவட்ட செயலாளர் செந்தில் சண்முகசுந்தரம், நகர அதிமுக செயலாளர் சரளை பி.ரத்தினசாமி, நகர துணை செயலாளர் ஏ.எம்.ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...