முன்விரோதத்தில் இரு பெண்கள் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 15th May 2019 09:11 AM | Last Updated : 15th May 2019 09:11 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே முன்விரோதத்தில் இரு பெண்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முத்தூர், மாதவராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆர்.முத்துலட்சுமி (45). இவருடைய கணவர் ராசு ஏற்கெனவே இறந்துவிட்டார். முத்துலட்சுமியின் மாமியார் வள்ளியம்மாள் (70). இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் மணி (34), பரிமளா (34), சரோஜா (46). இரு வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே, இடப்பிரச்னை தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் மணி, பரிமளா, சரோஜா ஆகியோர் முத்துலட்சுமியையும், வள்ளியம்மாளையும் கத்தியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் வள்ளியம்மாள் லேசான காயமடைந்தார். பலத்த காயமடைந்த முத்துலட்சுமி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், மணி உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.