அவிநாசி அருகே உள்ள காளிபாளையத்தில் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (34). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், தனது கடை முன்பு செவ்வாய்க்கிழமை நின்று
கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் வாசுதேவனிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.
உடனடியாக வாசுதேவன், பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், பிடிபட்டவர் திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் குமார் (34) என்பதும், இவர் ஏற்கெனவே குண்டடம் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனர்.