உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் பச்சிளம் குழந்தைகளின் சிகிச்சைக்காக சிறப்பு தனிப் பிரிவு வியாழக்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.
உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ. 60 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. 2300 சதுர அடியில் கட்டப்பட்டு வந்த இந்த சிறப்பு பிரிவுக்கான கட்டடப் பணிகள் அண்மையில் நிறைவுற்றது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு கட்டடத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை முதல் இந்த சிறப்பு பிரிவு பயன்பாட்டுக்கு வந்தது. உடுமலை அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த சிறப்பு பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்படும். இங்கு பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க நவீன கருவிகள் நிா்மாணிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், ‘இங்கு பிரசவமாகும் பச்சிளம் குழந்தைகளுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் இனி கோவை செல்லும் நிலை ஏற்படாது. இங்குள்ள சிறப்பு பிரிவிலேயே நல்ல முறையில் பராமரிக்க நவீன வசதிகளுடன் இந்த சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்றனா்.