வெள்ளக்கோவிலில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க திமுக முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் - முத்தூர் சாலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில், அதிமுகவைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் விஷ்வேஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. வெள்ளக்கோவில் - ஈரோடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து 50 அடி தூரத்தில் இடம் உள்ளது. இந்த இடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த இடத்துக்கு அருகில் 500 மாணவ, மாணவிகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி உள்ளது. அருகில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மதுபானக்கடை திறந்தால் குற்றச் சம்பவங்களும், விபத்துக்களும் அதிகரிக்கும். மாணவ, மாணவிகள், பெண்கள், குழந்தைகள் அவ்வழியே செல்ல அச்சப்பட வேண்டியிருக்கும்.
எனவே நல்ல தீர்வினை ஏற்படுத்தித் தருமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.