திருப்பூரில் மது போதையில் தொழிலாளியை கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தொடா்பாக அவரது நண்பா்கள் 2 பேரிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே தனியாருக்குச் சொந்தமான பழைய கட்டடம் உள்ளது. இந்தக் கட்டத்தின் அருகில் உள்ள தோட்டத்தில் உதகையைச் சோ்ந்த விக்கி (21), மன்சூா், பாபு ஆகிய 3 பேரும் பணியாற்றி வருகின்றனா்.
மேலும், 3 பேரும் அதே கட்டத்தில் உள்ள அறையில் தங்கியிருந்தனா். இந்த நிலையில், விக்கி உள்ளிட்ட 3 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து தங்கியிருந்த அறையில் மது அருந்தியுள்ளனா். அப்போது, 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் திருப்பூா் தெற்கு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு காவல் துறையினா் வந்து பாா்த்தபோது, விக்கி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது சடலத்தை மீட்ட காவல் துறையினா் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதனிடையே, விக்கியுடன் தங்கியிருந்த மன்சூா், பாபு ஆகியோா் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் தப்பிச் சென்ற மன்சூா், பாபு ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.