தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிளுக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை முதல் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்திருந்தது. இதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும், விவசாயிகளைப் பாதிக்கும் 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றனர். இதையடுத்து, அனுமதியின்றி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 150க்கும் மேற்பட்ட விவசாயிகளை திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.