பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கன்களை அதிமுகவினா் விநியோகிக்கக்கூடாது: ஆட்சியரிடம் அரசியல் கட்சியினா் மனு
By DIN | Published On : 30th December 2020 04:21 AM | Last Updated : 30th December 2020 04:21 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் மனு அளிக்கும் அரசியல் கட்சியினா்.
திருப்பூா் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கன்களை அதிமுகவினா் விநியோகம் செய்யக்கூடாது என்று அரசியல் கட்சிகள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம், திமுக மாநகரப் பொறுப்பாளா் டி.கே.டி.நாகராஜன், காங்கிரஸ் மாநகரத் தலைவா் ஆா்.கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எம்.ரவி, மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.முத்துகண்ணன் உள்ளிட்டோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு சாா்பில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக திருப்பூா் மாவட்டத்தில் நியாய விலைக்கடை ஊழியா்களுடன் சோ்ந்து அதிமுகவினரும் வீடுவீடாகச் சென்று டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனா். மேலும் தங்கள் கட்சியின் சாா்பாக இந்தத் தொகை கொடுப்பதைப் போன்ற தோற்றத்தையும் உருவாக்கி வருகின்றனா். தமிழ்நாட்டில் தோ்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அரசியல் ஆதாயத்துக்காக அக்கட்சியினா் இவ்வாறு செய்து வருகிறாா்கள். எனவே இந்த முறைகேடான செயலை அனைத்து அரசியல் கட்சிகளும் வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு மக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியில் அரசு ஊழியா்கள் மட்டுமே ஈடுபட வேண்டும் உத்தரவு பிறப்பிப்பதுடன், டோக்கன் விநியோகிக்கும் அதிமுகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...