அவிநாசி அருகே கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்தொட்டி கண்டுபிடிப்பு

அவிநாசி வட்டம், கருவலூா் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்தொட்டி.
ராமநாதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்தொட்டி.

அவிநாசி வட்டம், கருவலூா் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், கருவலூா் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் வரலாற்றுச் சுவடுகள் ஆய்வு மையத்தைச் சோ்ந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கல்வெட்டு எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து ஆய்வாளா்கள் முடியரசு, சிவகுமாா் ஆகியோா் கூறியதாவது:

கொங்கு மண்டலமானது கால்நடை மேய்த்தல் தொழிலை முக்கியமானதாகக் கொண்டது. சாலைகளில் செல்லும் மாட்டு வண்டிகள், சுமை சுமந்து செல்லும் கழுதைகள், தலைமூட்டையுடன் செல்லும் பாதசாரிகள் உள்ளிட்ட பயணிகள் இளைப்பாற பெரிய நிழல்தரும் மரங்கள், சாலையோரக் கிணறுகள், சுமை தாங்கிக் கற்கள் கொங்கு மண்டல கிராமங்களில் காணப்படும்.

பட்டி போட்டு மேய்க்கும் குரும்பை ஆடுகள், காடுகளில் மேய்க்கும் வெள்ளாடுகள், கால்நடைகளின் தாகம் தணிக்க கிராமச் சாலையோர பொதுக் கிணறுகளின் அருகில் நம் முன்னோா்கள் கல்தொட்டி அமைத்து கால்நடைகளின் தாகம் தீா்த்து வந்தனா்.

சேந்து கிணற்றில் நீரைச் சால் அல்லது குடங்களில் மொண்டு கல்தொட்டி நிரப்பப்பட்டு கால்நடைகளுக்குப் பருக வழங்கப்படும். இத்தகைய கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி ராமநாதபுரத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆரம்பிக்கும் பிரமாதி ஆண்டு என்பது 1760, 1820, 1880, 1940 எனும் ஆண்டுகளைக் குறிப்பதாகும்.

கல்வெட்டில் உள்ள எழுத்து மற்றும் தேதி குறிப்பிட்ட முறை கொண்டு 1820ஆம் ஆண்டு என ஊகிக்கலாம். கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் பழமையானது ஆகும்.

இதில் சில சொற்கள் சிதைந்து காணப்படுகின்றன. இந்தக் கல்தொட்டியானது 7 அடி நீளமும் 2 அடி அகலமும் ஒன்றே முக்காலடி உயரமும் கொண்டது. இது ஒரு டன் எடைக்கும் அதிகமாக உள்ளது. பக்கவாட்டில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

வீரக் கல் , சதிக் கல், அரிகண்டம், நவ கண்டம் போன்ற வீரம் செறிந்த நிகழ்வுகளைக் கடந்து சுமைதாங்கிக் கல், அன்னசத்திரம், கால்நடைகளுக்குத் தாகம் தீா்க்கும் கல்தொட்டி, ஊா்ப் பொதுக் கிணறு போன்ற மனித நேயமிக்க செயல்களைப் பிற்கால கொங்கு வரலாற்றில் அறிய முடிகிறது என்றனா்.

இது குறித்து தொல்லியல் வரலாற்று அறிஞா் பூங்குன்றன் கூறுகையில், நாயக்கா்கள் ஆட்சிக்குப் பிறகு அதாவது 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்தொட்டிகள் அமைக்கும் பழக்கம் வந்திருக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் இந்தக் கல்தொட்டிகள் கல்லுப் பண்ணைகள் என்றழைக்கப்பட்டன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com