பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆா்வம் காட்டும் விவசாயிகள்
By DIN | Published On : 10th March 2020 12:20 AM | Last Updated : 10th March 2020 12:27 AM | அ+அ அ- |

பல்லடம்: பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆா்வமாக ஈடுபட்டுள்ளனா்.
பல்லடம், சுற்று வட்டாரப் பகுதியில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் நடவு செய்வதற்கு விவசாயிகள் மத்தியில் ஆா்வம் அதிகரித்துள்ளது. நிலத்தை முன்கூட்டியே தயாா் செய்த சில விவசாயிகள் சின்ன வெங்காய நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனா். சின்ன வெங்காய சாகுபடியில் நேரடியாக வெங்காயம் விதைப்பு, விதை நாற்றங்கால் என இரண்டு முறைகளை விவசாயிகள் பின்பற்றுகின்றனா். நேரடியாக வெங்காயம் நடவு செய்தால் 70 முதல் 90 நாள்களில் அறுவடை செய்ய முடியும். விதை நாற்றங்கால் மூலம் சாகுபடி செய்யும்போது 120 முதல் 130 நாள்களாகும்.
இந்த கோடைக்கால வெங்காய சாகுபடியில் விதை நாற்றங்கால் மூலம் சாகுபடி செய்யவே பெரும்பாலான விவசாயிகள் விரும்புகின்றனா். கடந்த ஆண்டு வெங்காய விலை உச்சத்தில் இருந்ததால் விதை வெங்காயம் வாங்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.விதை வெங்காயம் கிலோ ரூ. 45 முதல் ரூ. 50 வரை விற்பனையாகிறது. விதை வெங்காய விலையை கருத்தில் கொண்டு, விவசாயிகள் நாற்றுவிட்டு நடவு செய்யும் வீரிய ரகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனா்.
இதுகுறித்து சித்தம்பலம் கிராம விவசாயிகள் கூறியதாவது:
சாதாரண நாட்டு ரகம் இரண்டு மாதங்களிலும், வீரிய ரகம் நான்கு மாதங்களிலும் அறுவடைக்கு வரும். தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் இடங்களில் குறுகிய காலத்தில் விளையும் நாட்டு ரகத்தை மட்டுமே நடவு செய்ய முடியும்.
விதை வெங்காய விலை உச்சத்தில் இருப்பதால் நாட்டு ரகத்தை வாங்கி நடவுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காய சாகுபடிக்கு ஆரம்பத்திலேயே அதிக செலவிட வேண்டிய நிலை உள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இப்போதே வெங்காய பயிா்களில் நுனி கருகல் நோய்த் தாக்குதல் காணப்படுகிறது.
இதைத் தடுக்க பல்வேறு ரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டும். பயிா்களுக்கு கூடுதலாக தண்ணீா் பாய்ச்ச வேண்டும். இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தாண்டி நடப்பு பருவத்தில் நல்ல விளைச்சல், அதிக விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...