திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்டம் முழுவதிலும் 206 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கூடுதல் ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பயண வழியில் உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும்.கரோனா கால நெருக்கடியை சமாளிக்க தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் மற்றும் திட்டத்தை சீர்குலைக்கக் கூடாது.
50 வயதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கக் கூடாது. ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை உயர்த்த வேண்டும், வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் நிபந்தனைகள் இல்லாமல் அனைத்து பொருள்களும் வழங்க வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி சீர்குலைக்கக் கூடாது.
மூன்றாண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது அல்லது நீக்கம் செய்வது என்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் 206 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதில், திருப்பூர் ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ரவி தலைமை வகித்தார்.
இதில், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் என்.சேகர், இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.