தாராபுரம் அருகே உள்ள அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர்நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள ஜமால்புதூரைச் சேர்ந்தவர் முத்துலால் (52), கூலித் தொழிலாளியான இவரது மகன் சல்மான் பாரிசி(24), இவர் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார். சல்மான் பாரசி தனது நண்பர்களான சுலைமான், சுல்தான், அம்சத், சேக் உள்ளிட்ட 7 பேருடன் அலங்கியம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் தடுப்பணைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமான ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது சல்மான் பாரிசி நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நண்பர்கள் ஆற்றில் குதித்து அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீரில் மூழ்கிய அவர் சிறிது நேரத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது நண்பர்கள் தாராபுரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.