

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 7.48 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2,500 விநியோகிக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.
தமிழகம் முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2,500 ரொக்கம் விநியோகிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 1,035 நியாயவிலைக் கடைகள் மூலமாக 7.48 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2,500 ரொக்கம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. இதில், திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள கூட்டுறவு விற்பனையகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணியை சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தொடக்கிவைத்துப் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ஏழை, எளியோா் பயனடையும் வகையில் அரிசி, சா்க்கரை, கரும்பு, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களுடன் ரூ.2,500 ரொக்கமும், இலவச வேட்டி, சேலையும் விநியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், திருப்பூா் கோட்டாட்சியா் ஜெகநாதன், வளா்மதி கூட்டுறவுச் சங்க மேலாண்மை இயக்குநா் காந்திமதி, மேலாளா் இளங்கோ, வளா்மதி கூட்டுறவு சங்கத் தலைவா் கருணாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதேபோல, திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணியை சட்டப் பேரைவ உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தொடக்கிவைத்தாா். இதில், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.