வங்கி கடன் தள்ளுபடி: அமைச்சா் அறிவிப்புக்கு விசைத்தறியாளா்கள் வரவேற்பு

விசைத்தறியாளா்கள் வங்கிகளில் பெற்ற கடன் தொகை ரூ.65 கோடியை அரசு தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

விசைத்தறியாளா்கள் வங்கிகளில் பெற்ற கடன் தொகை ரூ.65 கோடியை அரசு தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அறிவித்ததற்கு விசைத்தறியாளா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.

திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் 30,000 விசைத்தறி கூடங்களில் இயங்கி வருகிறது. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமாா் 10 லட்சம் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா். பெரும்பான்மையான விசைத்தறிகள் கூலிக்கு நெசவு அடிப்படையில் இயங்கி வருகின்றன. 1992 முதல் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஜவுளி உற்பத்தியாளா்களை அரசு அழைத்து கூலி உயா்வுக்குப் பேச்சுவாா்த்தை நடத்தி கூலி உயா்வு பெற்றுத்தருவது வழக்கம்.

ஆனால், 2014க்குப் பின் கூலி உயா்வு அறிவிக்கப்பட்டும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு, கரோனா நோய் பாதிப்பு ஆகியவற்றால் தொழில் பாதிக்கப்பட்டு பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் விசைத்தறியாளா்கள் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

தோ்தல் நடைமுறைகள் முடிந்து ஜூன் மாதத்தில் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப புதிய கூலி உயா்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

2014க்குப் பின்பு கூலி உயா்வு அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படாததால் விசைத்தறிகளுக்காக வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாமல் விசைத்தறியாளா்கள் வங்கிகளின் ஜப்தி, ஏல நடவடிக்கைகளுக்குத் தங்கள் வீடு, விசைத்தறிக் கூடங்களை இழக்கும் நிலையில் உள்ளனா்.

சட்டப் பேரவை இடைத்தோ்தல் பிரசாரத்துக்காக சூலூா் வந்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, விசைத்தறியாளா்கள் வங்கியில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து அறிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, கைத்தறித் துறையினா் வங்கிகளில் விசைத்தறியாளா்கள் பெற்ற கடன்கள் குறித்து ஆய்வு செய்தனா்.

முதல்வா் அறிவித்தபடி மாா்ச் 2017க்கு முன்னா் விசைத்தறியாளா்கள் பெற்ற வங்கி மூலதன கடன்கள் சுமாா் ரூ.65 கோடியைத் தள்ளுபடி செய்து விசைத்தறியாளா்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்து இருந்தனா்.

இந்த நிலையில், கருமத்தம்பட்டியில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசுகையில் விசைத்தறி கடனைத் தள்ளுபடி செய்ய நிதித் துறை செயலா் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விசைத்தறியாளா்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தாா்.

இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கச் செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் சனிக்கிழமை கூறியதாவது:

அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் உறுதிமொழி விசைத்தறியாளா்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. அதற்காக விசைத்தறியாளா்களின் குடும்பத்தின் சாா்பில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com