அவிநாசி: அவிநாசி வி.எஸ்.வி காலனியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார் .
அவிநாசி வி.எஸ்.வி காலனி யில் வசித்து வருபவர் விஜயன்(35). பின்னாலடை நிறுவன அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா(30). இவர்களுக்கு ஹர்னிகா(7), ஷாலினி(5) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் விஜய் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்றுவிட்டதாகவும், வீட்டில் தனியாக இருந்த பிரியா கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும், கணவர் விஜய் புகார் அளித்தார்.
இதையடுத்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விஜய் மனைவி பிரியாவை கொலை செய்து நாடகம் ஆடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவிநாசி காவல்துறை கணவர் விஜயை கைது செய்தனர்.