அவிநாசி, பிப்-சேவூர் பகுதியில் ரூ.1.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் சனிக்கிழமை வழங்கினார்.
தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அ.ஜெகதீசன், சேவூர் ஜி வேலுசாமி, மு. சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டப் பேரவைத் தலைவர் ப. தனபால் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது-அவிநாசி தொகுதியிலே நான் போட்டியிடும் போது, அதிமுக அரசு சார்பில் கொடுத்த வாக்குறுதியான, அத்திக்கடவு அவிநாசி திட்ட பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதேபோல, அவிநாசியில் அரசு கல்லூரி செயல்படுத்தப்பட்டுள்ளது . மேலும் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டு சொந்த இடத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்தொகுதியில் உள்ள 51 ஊராட்சிகள் பயன் பெரும் வகையில் ரூ.360 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம். அவிநாசி அன்னூர் பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் ரூ.260 கோடியில்கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டுள்ளது இப்படி இப்பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன் என்றார்.
இவ்விழாவில் வீட்டுமனை பட்டா, கூட்டுறவு சங்க வீட்டு வசதி கடன் உதவிகள், அம்மா இரு சக்கர வாகனம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி என 1326 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிறைவாக வட்டாட்சியர் ஜெகநாதன் நன்றி தெரிவித்தார்.