உடுமலை: உடுமலை அருகே சின்னாறு வனப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வனத் துறை ஊழியா் உயிரிழந்தாா்.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள கோடந்தூா் செட்டில்மெண்ட் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் நாகன் (26). இவா் உடுமலை வனச் சரகத்தில் சுற்றுச் சூழல் பாதுகாவலராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை பணி முடித்துவிட்டு ஒன்பதாறு சோதனைச் சாவடியில் இருந்து கோடந்தூரில் உள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். மலைப் பகுதியில் உள்ள ஏழுமலையான் கோயில் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, நாகன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி எறியப்பட்ட நாகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, பெண் குழந்தை உள்ளனா். இது குறித்து அமராவதி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.