திருப்பூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 10ஊராட்சிகள் பயன்பெறும் வகையில், ரூ.70கோடியே 43 லட்சம் மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.
திருப்பூர் ஒன்றியத்துக்கு 10 ஊராட்சிகளைச் சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கு பவானி ஆற்றுநீரை ஆதாரமாகக் கொண்டு அன்னூர்-மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.70 கோடியே 43 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான பணியை பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்தில் திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.
ஒன்றியக் குழுத் தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றியக் குழ உறுப்பினர் ஐஸ்வர்யா மகராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் சுலோக்சனா வடிவேல், பொறுப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இத்திட்டத்தில் பயன்பெறும் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், ஈட்டிவீராம்பாளையம், வள்ளிபுரம், பட்டம்பாளையம், மேற்குபதி, சொக்கனூர், தொரவலூர் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.