திருப்பூரில் பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 14 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு பொதுமுடக்கத்தில் ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ளதன் அடிப்படையில் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 முதல் மாலை 5 மணி வரையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் சேம்பிள்ஸ் உற்பத்தி செய்வதற்காக 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில், திருப்பூரில் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதி மற்றும் அதனைச்சார்ந்த பிரிண்டிங், டையிங், எம்பிராய்டரிங், நிட்டிங் ஆகிய நிறுவனங்களும் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
குறைந்த அளவு தொழிலாளர்கள்: திருப்பூரில் உள்ள ஏற்றுமதி மற்றும் அதனைச்சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக நிறுவனங்களில் குறைந்த அளவு தொழிலாளர்களே பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தொழிலாளர்களுக்கு வெப்ப பரிசோகனை, சானிடைஸர்,சோப்பு மூலமாக கைகழுவிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஏற்றுமதி நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்குகிறதா என கண்காணிக்க சார் ஆட்சியர் மற்றும் நிலை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் மூடல்: இதனிடையே, உள்நாட்டு விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனைச்சார்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.
மளிகை, காய், இறைச்சி கடைகள் திறப்பு: திருப்பூர் மாநகரில் உள்ள மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டன. திருப்பூர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் ஒரு சில பூக்கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன, மேலும், மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இரு, நான்கு சக்கர வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாநகரில் உள்ள 8 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.