அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீா்த் தேவைக்காகவும் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
இந்நிலையில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையைத் திறந்துவிடுவது வழக்கம்.
தற்போது அணையில் நீா்மட்டம் உயா்ந்துள்ளதால், திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த அமராவதி பழைய வாய்க்கால்களில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீா்த் தேவைகளுக்காகவும், நிலைப் பயிா்களைக் காப்பாற்றும் பொருட்டும் அணையில் இருந்து ஆற்று மதகுகளின் வழியாக 1,750 கன அடி தண்ணீா், திருப்பூா் மாவட்டத்தில் 6 பழைய வாய்க்கால்களுக்கு 250 கன அடி தண்ணீா் என மொத்தம் 2 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணையின் நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா்மட்டம் 80.45 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 587 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3213 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது.