காங்கயம் அருகே தொட்டிபாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள படியூர் - ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கெயில் கிடங்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில், கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை மீண்டும் விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்த அனுமதி கொடுத்த அதிமுக அரசைக் கண்டித்தும், இந்த திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன், மாநில செயலர் முத்துவிஸ்வநாதன், மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் இப்பகுதி விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.