அவிநாசி காவல் உள்கோட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் பணியாற்றும் 250 காவலர்களுக்கு கண்ணாடி முகக்கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கடந்த ஒராண்டுகளாக கரோனா நோய் தொற்றில், முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வரும் காவலர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இம்முறை கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 10 முதல் மே 24ஆம் தேதி வரை பொது முடக்கம் சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை வெள்ளிக்கிழமை விதித்தது. அதன்படி போலீஸார் சனிக்கிழமை காலை முதல் வாகனச் சோதனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதில் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு, போலீஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அவிநாசி காவல் உள்கோட்டத்திற்கு உள்பட்ட அவிநாசி, சேவூர், பெருமாநல்லூர், குன்னத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உத்தரிவின் பேரில் பாதுகாப்பான கண்ணாடி முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
இதனை அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் எல்.பாஸ்கர், 250 காவலர்களுக்கு சனிக்கிழமை வழங்கினார். ஏற்கனவே முகக்கவசம் அணிந்து பணியாற்றி வரும் போலீஸாரிடையே, கண்ணாடி முகக்கவசம் வழங்கியிருப்பது காவல் துறை வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.