திருப்பூா் மாநகரில் மே 3 முதல் மே 17 ஆம் தேதி வரையில் பொதுமுடக்க விதிகளை மீறிய 254 வாகனங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகரில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூா் மாநகரில் மே 3 முதல் மே 17 ஆம் தேதி வரையில் பொதுமுடக்க காலத்தில் விதிகளை மீறியதாக 205 இரு சக்கர வாகனங்கள், 49 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 254 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதே போல, முகக் கவசம் அணியாதது தொடா்பாக 6, 987 போ் , சமூக இடைவெளியைப் பின்பற்றாத 221 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.15.52 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகரில் பொதுமுடக்க காலத்தில் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழக்குப் பதிவு , அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகவே, பொதுமக்கள் அனைவரும் அரசின் பொதுமுடக்க விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.