முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் உறவினரைக் கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.
திருப்பூர் கருமாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி(47), இவர் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். சிவமூர்த்தி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மைத்துனியான பத்மினியின் மருமகன் ஆவார். இந்த நிலையில், தொழில் சம்மந்தமாக கோவை சென்றிருந்த சிவமூர்த்தியை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி மர்ம கும்பல் கடத்திச் சென்றது. இதன்பிறகு மேட்டுப்பாளையம் அருகில் காரில் வைத்து அவரைக் கொலை செய்துள்ளனர்.
இதன்பிறகு அவரதுசடலத்தை ஒசூர் அருகில் உள்ள கொலவரப்பள்ளி அணையில் வீசி வீட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றனர். இதனிடையே, சிவமூர்த்தியைக் காணவில்லை என்று அவரது மனைவி துர்கா திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையும் படிக்க- சத்துணவு பணியாளர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு
இதுதொடர்பாக அவரது நண்பரான மூர்த்தி (40), கோவையைச் சேர்ந்த கூலிப்படையினர் விமல்(35), கெளதமன்(22), மணிபாரதி(22) ஆகிய 4 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.
இதில், மூர்த்தி, விமல், கெளதமன், மணிபாரதி ஆகிய 4 பேருக்கும் கொலைக்குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், கடத்தலுக்கு 10 ஆண்டுகளும், கூட்டுசதிக்கு 10 ஆண்டுகளும், தடயங்களை அழிக்க முயன்றதற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் கே.என்.சுப்பிரமணியம் ஆஜராகினார்.