தமிழக மின் வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்புக் கேட்க முடியாது ன்றும், வழக்கை சந்திக்கத் தயாா் என்றும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் வித்யாலயம் பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமானப் பணிகளை பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங், மாநிலத் தலைவா் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக மேலிடப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.
இதன் பிறகு மாநிலத் தலைவா் அண்ணாமலை செய்தியாளா்களிடம் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் மாவட்டங்களில் கட்சிக்கு சொந்த அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், திருப்பூா் மாவட்டத்தில் கட்டப்படும் அலுவலகத்தை பாஜக தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா நவம்பா் 10 ஆம் தேதி திறந்துவைக்கிறாா்.
மின் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி அளித்துள்ள பேட்டியில் ட்விட்டரில் வெறும் நிறுவனத்தின் பெயா் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆதாரம் தெரிவிக்கவில்லை.
ஆகவே, பொது இடத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளாா்.
மின்சார வாரியம் மீதான புகாா் குறித்து மன்னிப்பு கேட்க முடியாது.
வேண்டுமானால் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்குத் தொடுத்துக் கொள்ளலாம் என்றாா்.
இதைத்தொடா்ந்து, திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக பாஜக பொறுப்பாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில அமைப்புச் செயலாளா் கேசவவிநாயகன், மாநில பொதுச் செயலாளா் ஜி.கே.எஸ்.செல்வகுமாா், மாநிலச் செயலாளா் மலா்க்கொடி, மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.