மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு கரோனா: அவிநாசி அரசு மருத்துவமனை மூடல்

அரசு மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்பட்டது.
அவிநாசி அரசு மருத்துவமனை
அவிநாசி அரசு மருத்துவமனை

அரசு மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்பட்டது.

அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 25க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இம்மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மருத்துவமனையில் பணிபுரியும்  மருத்துவர்கள், மருத்துவமனைப் பணியாளர் என மொத்தம் 4 பேருக்கு சனிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவிநாசி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தலைமையிலான பணியாளர்கள் அவிநாசி அரசு மருத்துவமனையில் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அவிநாசி அரசு மருத்துவமனையில் நடைபெற இருந்த சிறப்பு தடுப்பூசி முகாம், அவிநாசி பேரூராட்சி அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவர்கள், பணியாளர்கள் என 6க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மூன்று நாள்கள் மருத்துவமனை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com