காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற மதுரையைச் சேர்ந்த தேஜஸ்வின் சங்கருக்கு அவிநாசியில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரையை பூர்விகமாக கொண்ட தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் (23) பெர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர், முதல்முறையாக இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ளார்.
இவருக்கு நாடு முழுவதுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த மதன் பவுண்டேஷன் சார்பில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகத்தின் தலைவர் சக்திவேல் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இதையும் படிக்க- ஓ.பன்னீர்செல்வத்திற்கு உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ ஆதரவு
விழாவில் தேஜஸ்வின் சங்கருக்கு பொன்னாடை போர்த்தி ரூ. 5 லட்சம் காசோலை ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் பயிற்சியாளர் சுனில் குமாருக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக, தேஜஸ்வின் சங்கர், பள்ளிக் குழந்தைகளுடன் விளையாட்டு துறையில் சாதிப்பது குறித்து கலந்துரையாடினார்.
அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பதிலளித்தார்.