திருப்பூரில் குடும்ப பிரச்சினையால் மனைவியை கொலை செய்த ஓட்டுநர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தென்காசியை சேர்ந்த குமார்(31), இவரது மனைவி தனலட்சுமி(28), இந்தத தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வருகின்றனர். குமார் சரக்கு வாகன ஓட்டுநராகவும், தனலட்சுமி பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் தனலட்சுமி தனக்கு துரோகம் செய்து தென்காசியில் உள்ள மற்றொரு நபருடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகமடைந்து அவ்வப்போது குமார் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனிடையே,நேற்றிரவு வாக்குவாதம் முற்றியதில் வீட்டில் வைத்திருந்த அரிவாளை கொண்டு தனலட்சுமி கழுத்தை அறுத்துள்ளார். இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற 15 வேலம்பாளையம் போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த குமாரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.