பல்லடத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தொடா்பாக காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக காமநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட கேத்தனூரில் உள்ள ஒரு பேக்கரியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்த கணேசன் (42) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 11 கிலோ 600 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.