திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலை விபத்தில் வழக்குரைஞர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகிய 3 பேரும் பலியாகினர்.
திருச்சியை அடுத்த பெரம்பலூரை சேர்ந்தவர் மணிகண்டன்(35), இவர் திண்டுக்கல்லில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மது(30), மகள் ருத்ரா(3), 3 மாத கைக்குழந்தை ஆகியோருக்கு கோவையில் உள்ள உறவினரின் திருமணத்துக்காக மணிகண்டன் காரில் சென்றுள்ளார். இதன் பின்னர் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை இரவு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவரது கார் தாராபுரத்தை அடுத்த சாலக்கடை அருகே வந்து கொண்டிருந்தபோது மேம்பாலத்தில் இருந்து தடுப்பில் பலமாக மோதியது. இந்த விபத்தில் மது, அவரது 3 மாத கைக்குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன், அவரது மகள் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மூலனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.