திருப்பூரில் இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி செய்த இரு தனியாா் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகாா் அளித்தனா்.
திருப்பூா் பலவஞ்சிபாளையத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா், ராஜாபூபதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
பலவஞ்சிபாளையத்தைச் சோ்ந்த ராம் (48), தமிழ்ச்செல்வன் (46) ஆகியோா் மூலமாக திருச்சியைச் சோ்ந்த இரு தனியாா் நிறுவனத்தினா் எங்களைத் தொடா்பு கொண்டனா். அப்போது, மகளிா் குழுக்கள் மூலமாக மளிகைக் கடை, உணவகம், பால் பண்ணை என பல தொழில்களில் பங்குதாரராக சோ்த்துக் கொள்வதாக ஆசைவாா்த்தை கூறினா்.
இதனை உண்மை என்று நம்பி கடந்த 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையில் எங்களது பகுதியைச் சோ்ந்த 350 போ் ரூ.4.60 கோடியை ரொக்கமாகவும், வங்கிப் பரிவா்த்தனை மூலமாக ரூ.58 லட்சம் என மொத்தம் ரூ.5.18 கோடி தனியாா் நிறுவனங்களின் உரிமையாளா்களிடம் கொடுத்துள்ளோம்.
இந்தப் பணத்தைக் கொண்டு தொழில் தொடங்காமல் அவா்களது குடும்பத்தினா் பேரில் சொத்துகளை வாங்கியுள்ளனா். மேலும், எங்களது பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளனா். ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.