அவிநாசி அருகே சொட்டுநீர் பாசன முறைகேடு: அவிநாசியில் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் பணி இடை நீக்கம்
By DIN | Published On : 18th March 2022 04:39 PM | Last Updated : 18th March 2022 04:39 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
அவிநாசி: அவிநாசி அருகே விவசாய விளை நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதில் முறைகேடு தொடர்பான புகாரையடுத்து, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, நடுவச்சேரி அருகே தளிஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் விவசாயி. தனக்கு சொந்தமான 3.55 ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, 1.25 ஏக்கர் பரப்பளவில் அரசின் 100 சதவீத மானியத் திட்டத்தில் தோட்டக்கலைத் துறையினர் மூலம், சொட்டுநீர் பாசன உபகரணம் பொருத்தினார். மீதமுள்ள 2.30 ஏக்கர் பரப்புக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க அவிநாசி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.
ஆனால் சொட்டுநீர் பாசனம் ஏற்கனவே விவசாய விளை நிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இனி 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் சொட்டுநீர் பாசனம் அமைக்க முடியும் என தெரிவித்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த பால்ராஜ், எனது நிலத்தில் ஒரு பகுதி மட்டுமே சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2.30 ஏக்கருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கவில்லை எனவும், சொட்டுநீர் பாசனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, தோட்டக்கலைத்துறை செயலருக்கு புகார் அனுப்பினார்.
இதையடுத்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் வியாழக்கிழமை பால்ராஜின் விவசாய விளை நிலத்தில் ஆய்வு செய்து, அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், அவிநாசி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மாலதி, உதவி தோட்டக்கலைத் துறை அலுவலர் அருண் பிராங்க்ளின் ஆகியோர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கை விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...