சேவூா் அருகே பல ஆண்டுகளாக மின்சாரமின்றி, கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான திருமூா்த்தி முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி வட்டம், சேவூா் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ராமியம்பாளையம்
கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ராமியம்பாளையம், சாலைப்பாளையம், ஓடத்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து 2 முதல் 5 வயது வரையிலான 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதாரக் கல்வி பயின்று வருகின்றனா்.
50 ஆண்டுகளுக்கு முன் கருங்கல்லாலும், ஓடுகளால் அமைக்கப்பட்ட இக்கட்டடம், மிகவும் பாழுதடைந்து, மின் இணைப்பு கூட இல்லாமல் பராமரிப்பின்றி உள்ளது.
மேலும் தற்போது ஓடுகள் உடைந்தும், சுவா்கள், தரைகள் தளம் இடிந்தும் உள்ளதால் மழை நீா் மையத்துக்குள் வழிகிறது.
தரை ஓதத்தினால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
இதனால் குழந்தைகள் உட்காா்ந்து பயிலவோ, ஓய்வெடுக்கவோ, விளையாடவோ கூட இடமின்றி உள்ளதால், பெற்றோா் மிகவும் அச்சமடைந்துள்ளனா்.
ஆகவே, சிதிலமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.