விவசாய குட்டை நீரில் தவறி விழுந்து சிறுவன் பலி: காப்பாற்றச் சென்ற தாயும் குட்டையில் விழுந்து உயிரிழப்பு
By DIN | Published On : 16th October 2022 06:32 PM | Last Updated : 16th October 2022 06:32 PM | அ+அ அ- |

கலாமணி, வினு தட்சன்.
தாராபுரம் அருகே விவசாய குட்டை நீரில் தவறி விழுந்து தாயும், மகனும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரம் கிராமம், சின்னக்காம்பாளையம் பிரிவு அருகே விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சக்திவேல் (35). இவரது மனைவி கலாமணி (27), மகன் வினு தட்சன் (9). வினு தட்சன் கோவிந்தாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இவர்களது விவசாயத் தோட்டத்தில் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த விவசாய பாசன நீர்க் குட்டையில் இயங்கிக் கொண்டிருந்த மின் மோட்டாரை அணைப்பதற்கு கலாமணியும், மகன் வினு தட்சனும் சென்றுள்ளனர். அப்போது வினுதட்சன் பண்ணை குட்டையின் சுவர் மீது ஏறி உள்ளே எட்டிப் பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி குட்டை தண்ணீரில் விழுந்துள்ளார்.
இதையும் படிக்க- அடுத்து இந்தியில் பொறியியல் புத்தகங்கள்: மத்திய அமைச்சர் அமித்ஷா
இதைப் பார்த்த கலாமணி, மகனைக் காப்பாற்ற அவரும் நீர் குட்டையில் உள்ளே இறங்கியுள்ளார். இதில் தாய், மகன் இருவரும் நிலை தடுமாறி குட்டையில் இருந்து வெளியே வரமுடியாமல், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறிது தொலைவில் இருந்து தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சக்திவேல், இருவரையும் காப்பாற்ற விரைந்து வந்துள்ளார்.
எனினும், இருவரும் அதற்குள் தண்ணீரில் மூழ்கி, இறந்திருந்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் போலீசார் தாய், மகன் இருவரது சடலங்களையும் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...