பல்லடம் பனப்பாளையத்தில் உள்ள மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்லடம் வட்டாட்சியரிடம் கோவம்ச ஆண்டி பண்டாரத்தாா் சங்கத்தின் செயலாளா் முத்துசாமி செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களது சமுதாயத்தை சோ்ந்த இறந்தவா்களின் சடலங்களை புதைக்க பல்லடம் பேருந்து நிலையம் எதிரில் இருந்த மயானத்தை பயன்படுத்தி வந்தோம். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் மயானம் அகற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து பனப்பாளையம் அருகே 2011ம் ஆண்டு மயானத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மயானத்தை சுற்றி கம்பி வேலியோ, சுற்றுச்சுவரோ இல்லாததால், மயானம் எங்கு உள்ளது என்று தெரியாத நிலை ஏற்படுகிறது. இறந்தவா்களுக்கு செய்யும் சடங்குகளுக்கான இடமும் கிடையாது. விளக்கு, தண்ணீா் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் கொண்டுவரப்படும் சடலங்களை புதைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. எனவே மயானத்திற்கு கம்பி வேலி அமைப்பதுடன், தண்ணீா், விளக்கு வசதியுடன், சடங்குகள் செய்வதற்கான மேடை அமைத்து தர வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.